அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக விசாரணை: பதில்கள் வீடியோவில் பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினர். அவர் அளித்த பதில்கள் அனைத்தும் வாக்குமூலமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், நீதிமன்ற காவலில்சென்னை புழல் மத்தியசிறையில் அடைக்கப்பட்டார். இந்த கைது நடவடிக்கை சட்டப்பூர்வமானது என நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், வரும் 12-ம் தேதி வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, அன்று இரவே சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு3-வது மாடியில் செயல்படும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை தொடங்கியது. கரூர், கோவையில் 9 இடங்களில் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட 60 சொத்து ஆவணங்கள், ரூ.22 லட்சம்ரொக்கம், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இரவு 11 மணி வரை விசாரணை நடந்தது. பின்னர், அங்கேயே செந்தில் பாலாஜி தூங்கினார்.

நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் கண் விழித்தார். அவரது வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட மாற்றுத் துணிகள், பிரஷ், பேஸ்ட், சோப் உள்ளிட்டவை அவரிடம் வழங்கப்பட்டன. தேநீர், காலை உணவுக்கு பிறகு, 2-வது நாளாக விசாரணை தொடங்கியது. முன்னதாக அவரது உடல்நிலையை சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். அமலாக்கத் துறை அலுவலகத்திலேயே அவர்களும் தங்கி உள்ளனர்.

சட்டவிரோத பண பரிமாற்ற விவகாரத்தில் பின்னணியில் இருந்தவர்கள் குறித்து நேற்று பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டுள்ளனர். அவர் அளித்த பதில் முழுவதையும் வாக்குமூலமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பின்னர், ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட மதிய உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு தொடங்கிய விசாரணை இரவு வரை நீடித்தது. அவரை பார்க்க வழக்கறிஞர், செய்தியாளர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.

பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சாஸ்திரி பவன் வெளியே நுங்கம்பாக்கம்போலீஸார் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதே வழக்கில் செந்தில் பாலாஜி தம்பிஅசோக்குமாரும் சேர்க்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியிடம் விசாரணை முடிந்தபிறகு, நீதிமன்றம் மூலம் அவர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். தேவைப்பட்டால் செந்தில் பாலாஜியை டெல்லிக்கு அழைத்துசெல்வது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE