மாநில முதல்வரின் அதிகாரத்தை பறிக்கும் சட்டத்துக்கு அதிமுக ஆதரவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: டெல்லி நிர்வாக மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போல தரம் குறைக்கும் ‘டெல்லி நிர்வாக மசோதா’ மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாளாகும். எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூட சிதைப்போம் என்ற பாஜகவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறுஎன்னவென்று சொல்வது. 29 வாக்கு வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச்செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்.

மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல், டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பாஜகவின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதல்வரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக்கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை.

‘நான் யாருக்கும் அடிமையில்லை’ என்றபடியே, பாஜகவின் பாதம் தாங்கி, ‘கொத்தடிமையாக’ தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE