நீர்வளத் துறை பொறியாளர்களுக்கு 9 DGPS, 214 கையடக்க GPS கருவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: நீர்வளத் துறை சார்பில் பொறியாளர்களுக்கு 9 DGPS மற்றும் 214 கையடக்க GPS கருவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த DGPS மற்றும் கையடக்க GPS ஆகிய நவீன கருவிகள் செயற்கைக்கோள் தொடர்புடன் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.8) தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் கட்டுப்பாட்டிலுள்ள 9 கோட்டங்களுக்கு 9 DGPS (Digital Global Positioning System) கருவிகளையும், 214 கையடக்க GPS கருவிளையும் நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பொறியாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 5 பொறியாளர்களுக்கு அக்கருவிகளை வழங்கினார்.

நீர் ஆதாரங்களை சிறந்த முறையில் மேம்படுத்தி விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு துறைகளின் நீர்த் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு புதிய கட்டமைப்புகளை உருவாக்குதல், ஏற்கெனவே உள்ள நீர்நிலைகள் மற்றும் அதன் உட்கட்டமைப்புகளை நல்ல முறையில் பராமரித்தல், பாசன கட்டமைப்புகளான அணைகள், அணைக்கட்டுகள், நிலத்தடி தடுப்புசுவர்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் போன்றவற்றை உருவாக்குதல், புனரமைத்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பல்வேறு முக்கியப் பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.

நீர்வளத்துறையின் 2021-2022 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், நீர்வளத்துறையின் திட்ட உருவாக்க பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள 9 கோட்டங்களுக்கு 9 DGPS கருவிகளையும் மற்றும் அப்பிரிவில் உள்ள அனைத்து உதவிப் பொறியாளர்கள் மற்றும் உதவி செயற் பொறியாளர்களுக்கு 214 மடிக்கணினிகள், 214 கையடக்க GPS கருவிகள் மற்றும் 250 பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த உபகரணங்களை கொள்முதல் செய்திட மொத்தம் 9.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அக்கருவிகளை நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பொறியாளர்களுக்கு வழங்கிடும் வகையில், 9 DGPS கருவிகள் மற்றும் 214 கையடக்க GPS கருவிகள் ஆகியவை எல்காட் மூலம் 5.11 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த DGPS மற்றும் கையடக்க GPS ஆகிய நவீன கருவிகள் செயற்கைக்கோள் தொடர்புடன் இயக்கப்படுகிறது.

மேலும், இந்த DGPS கருவிகள் செயற்கைகோள்களிலிருந்து சமிக்ஞைகளைப் பெற்று அதன்மூலம் இருப்பிடத்தை துல்லியமாக அளப்பதால், நீர்பாசன திட்டங்களான தடுப்பணைகள், ஏரிகள், நீர்தேக்கங்கள், கால்வாய்கள் போன்ற அமைப்புகளை அமைத்திட துல்லியமான நிலஅளவைகள் போன்ற ஆய்வு பணிகளை புவியியல் தகவல் அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளவும், வரைபடங்கள் மற்றும் மதிப்பீடுகள் தயாரிக்கும் பணிகளை நீர்வளத்துறையின் திட்ட உருவாக்க பிரிவு பொறியாளர்கள் துரிதமாக மேற்கொள்ளவும், அதன்மூலம் திட்டங்களின் பலன்கள் மக்களிடம் உரிய காலத்தில் சென்றடையவும் இக்கருவிகள் பெரிதும் உதவுகின்றன. அத்துடன் நீர்வள ஆதாரங்களை தொடர்ந்து கண்காணிப்பதில் இக்கருவிகள் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் அ. முத்தையா, நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் தலைமைப் பொறியாளர் க. பொன்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE