விருதுநகரில் இரு அமைச்சர்களின் அச்சத்தால் பாரத அன்னையின் சிலை அகற்றம்: அண்ணாமலை சாடல்

By செய்திப்பிரிவு

சென்னை: "திமுக அரசின் அவலங்களை எங்கள் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே பாரத அன்னையின் சிலை அகற்ற நடவடிக்கை" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "விருதுநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல் துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது.

ஊழல் திமுக அரசின் அவலங்களை எங்கள் "என்மண் என் மக்கள்" யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை. பாரத அன்னையின் புகழ் ஓங்குக!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, விருதுநகரில் பாஜக மாவட்ட அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதமாதா சிலையை வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் நேற்று நள்ளிரவு திடீரென அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. | விரிவா வாசிக்க > பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரத மாதா சிலை நள்ளிரவில் திடீர் அகற்றம்: விருதுநகரில் பரபரப்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE