புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அதிகாலையிலேயே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்ட சூழலில் அரசு ஊழியர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மட்டும் பொதுமக்கள் போல் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்துள்ளார். அவர் முதல் நாளான நேற்று ஜிப்மரில் நடந்த நிகழ்வில் பங்கேற்ற பிறகு மணக்குள விநாயகர் கோயில், திருக்காஞ்சி கோயில் சென்று வழிபட்டார். முருங்கப்பாக்கம் கைவினைக் கிராமம் சென்று பார்த்தார். நேற்று இரவு ராஜ் நிவாஸில் நடந்த விருந்தில் பங்கேற்றார்.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் அவர் தங்கியுள்ளார். இன்று காலை 6 மணிக்கு நடைப் பயிற்சி செய்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக பொதுமக்கள் நடைப் பயிற்சி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், முன்னதாக காலை 5.25 மணிக்கே நடைப்பயிற்சிக்கு குடியரசுத் தலைவர் கிளம்பினார்.
அதே நேரத்தில் அரசு ஊழியர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் குடியரசுத் தலைவர் செல்லும் போது பொதுமக்கள் போல் நடைப் பயிற்சி செய்தனர். அதைத்தொடர்ந்து அங்கிருந்த சிலர் குடியரசுத் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். புஸ்ஸி வீதி சந்திப்பில் இருந்த விருந்தினர் மாளிகையில் இருந்து பழைய கலங்கரை விளக்கம் வரை குடியரசுத் தலைவர் இரு முறை நடந்து சென்றார்.
கடற்கரைச் சாலையில் காந்தி சிலையை பார்த்தபோது, விளக்கத்தை அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 40 நிமிடங்கள் நடைப் பயிற்சி முடித்துக் கொண்டு விருந்தினர் மாளிகை திரும்பினார்.