நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை - மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். அவர்களை உடனடியாக மீட்டு தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த 3-ம் தேதி இரவு அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்வகுமார், அதே பகுதியை சேர்ந்த ராஜா, பொன்னு ராஜா, இளையராஜா மற்றும் கணபதி, சாய் சிவா, முகேஷ், அரவிந்த், அழகு, வேலு ஆகிய 10 பேர் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு அவர்கள், இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் செந்தில்குமாரின் விசைப்படகை சுற்றி வளைத்தனர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 பேரையும் கைது செய்தனர். அவர்களது விசைப் படகையும் பறிமுதல் செய்து, திருகோணமலைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அவர்களை மீட்டு தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ‘இந்த ஆண்டு மட்டும் இதுவரை 93 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 14 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை சிறையில் வாடும் 19 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து, அவர்களை தாயகம் அழைத்து வரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாதிக்கும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்’ என்று அக்கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பாஜக தலைவர் அண்ணாமலையும் கடிதம் எழுதியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE