நீதிமன்ற வழக்குகளில் அலட்சியம் கூடாது - கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் அறிவுரை

By செய்திப்பிரிவு

நாமக்கல்: நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் கல்வித் துறை அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் இருந்து பள்ளிக் கல்வி இயக்கக இயக்குநர் க.அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 16-ம் தேதி நீதிமன்ற தீர்ப்பாணையை நிறைவேற்றுவதில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) ஆகியோரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இனி வரும் காலங்களில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் துரிதமாகச் செயல்படுத்தவும், இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாத வகையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலைக் கல்வி) விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் கூறியதாவது:

நாமக்கல்லில் உள்ள அரசு நிதி உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிமன்றம் பிடிவாரண்ட்: அதை செயல்படுத்தாததால், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும், அவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாத வகையில் நீதிமன்ற வழக்குகளில் துரிதமாகச் செயல்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்கக இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE