தென்மண்டலத்தில் கஞ்சா ஒழிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும் - புதிய ஐஜி நரேந்திரன் நாயர் உறுதி

By என். சன்னாசி

மதுரை: தென்மண்டலத்தில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என புதிய ஐஜி நரேந்திரன் நாயர் தெரிவித்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தென்மண்டல ஐஜியாக பொறுப்பேற்ற அஸ்ரா கார்க் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மதுரை காவல் ஆணையராக பணிபுரிந்த நரேந்திரன் நாயர் தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 12 மணிக்கு தென்மண்டல ஐஜியாக நரேந்திரன் நாயர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஐஜி அஸ்ரா கார்க் ஒப்படைத்தார்.

இதைத்தொடர்ந்து புதிய ஐஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘தென்மண்டலத்தில் அஸ்ரா கார்க் கடந்த ஒன்றரை ஆண்டாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக கஞ்சா ஒழிப்பில் அவர் எடுத்த நடவடிக்கை தொடரும். இதற்கு தேவையான கூடுதல் தனிப்படைகளும் ஏற்படுத்தப்படும்’ என்றார்.

இதனிடையே புதிய காவல் ஆணையர் வரும் வரை, மாநகர காவல் ஆணையர் பொறுப்பை கூடுதலாக நரேந்திரன் நாயர் கவனிக்கிறார்.

தென்மண்டல ஐஜியான நரேந்திரன் நாயர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுமார் 44 வயதான இவர், பொறியியல் பட்டதாரி. 2005-ல் இவர், ஐபிஎஸ் பணிக்கு தேர்வாகியுள்ளார். இதைத்தொடர்ந்து ஈரோடு, வந்தவாசி, கடலூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம், தமிழக ஆளுநர் ரோசையாவுக்கு தனி பாதுகாப்பு அதிகாரி மற்றும் திருவனந்தபுரம், கோவை, சென்னை போன்ற இடங்களில் பணியாற்றி யுள்ளார்.

கடந்த ஜனவரியில் மதுரை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார். தற்போது, தென் மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE