பொம்மன் - பெள்ளியை சந்தித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு - மக்களுக்கு சாக்லெட் கொடுத்து சர்ப்ரைஸ்!

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உதகை அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வந்து ஆஸ்கர் புகழ் பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

முதுமலை புலகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில், ரகு என்ற யானை குட்டியை பொம்மன் மற்றும் பெள்ளி என்ற தம்பதியினர் வளர்த்தனர். இதனை கார்த்திகி கொன்சால்வ் ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்று ஆவண குறும்படமாக எடுத்தார். இது சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை தட்டிச் சென்றது. விருது கிடைத்த நாள் முதல் யானை குட்டியை வளர்த்த பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோர் உலக புகழ் பெற்றனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர்களை அழைத்து பரிசுகள் வழங்கி கவுரவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் முதுலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைள் வளர்ப்பு முகாமுக்கு வந்து, அங்கு பணியாற்றி வரும் பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின், அவர்கள் இருவரையும் அழைத்து பரிசுத் தொகை வழங்கினார்.

இந்நிலையில். இந்த தம்பதிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூர் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு பிற்பகல் 3.30 மணிக்கு வந்தார்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழக வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் ஆகியோர் மலர் கொத்துக் கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்றார். தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமை பார்வையிட்ட அவர் அங்கு பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அங்குள்ள பழங்குடியின மக்களை சந்தித்து பேசினார். பின் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கினார்.

பாகன்களுடன் உரையாடல்: குடியரசுத் தலைவர் முர்மு கோவை சாடிவயல் மற்றும் முதுமலை யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் 38 பேரிடம் கலந்துரையாடினார். அவர்களிடம் பேசும் போது, “முதுமலை புலிகள் காப்பகத்தை சிறப்பாக பராமரித்துள்ளீர்கள். வனவிலங்களின் பாதுகாப்புக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளீர்கள். நமது யானைகளை பாதுகாப்பது நமது தேசிய கடமையாகும். இந்தியாவின் கலாச்சார தொன்மையை பாதுகாப்பதில் பழங்குடிகள் முக்கிய பங்கு ஆற்றிவருகின்றனர். இந்த பழங்குடிகளுக்கு இந்திய அரசியல் அமைப்பு உரிமை வழங்குவது மிகவும் முக்கியத்துவமானதாக உள்ளது.

உங்களுக்கு தேவையான வீடுகள், சாலை, மின்வசதிகள் செய்து தரப்படும், வனத்தை சிறப்பாக பராமரியுங்கள். அதேபோல் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வையுங்கள். அது உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்’’ என்றார். பின்னர், 40 ஆண்டுகளாக பாகன்களாக பணியாற்றி வரும் தேவராஜ், கிருமாறன் ஆகியோரிடம், யானைகளை எப்படி பராமரிப்பது, காட்டு யானைகளை கும்கி யானைகள் உதவியுடன் விரட்டியது எப்படி, என்னென்ன சிரமங்கள் இருந்தன ஆகிய விஷயங்களை கேட்டு வியப்படைந்தார்.

குடியரசுத் தலைவர் யானைகள் முகாமுக்கு வரும் போது அவரை வரவேற்க உண்ணி குச்சிகளால் யானைகள் வடிவமைக்கபட்டிருந்தன. அதை பயத்துடன் பார்த்து வந்த குடியரசு தலைவரிடம், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூவிடம் ‘யானைகளை பார்த்தவுடன் நான் பயந்து விட்டேன். அதன்பிறகு தான் இது யானை வடிவம் என்று தெரிந்தது’ என்று கூறிக்கொண்டே மெதுவாக குச்சி யானைகளை தொட்டு பார்த்தார். பின்னர் மாலை 5 மணிக்கு முகாமில் இருந்து மசினகுடி திரும்பினார்.

சாக்லேட் வழங்கினார்: அப்போது அவரை பார்க்க ஏராளமான மக்கள் காத்திருந்தனர். மக்களை பார்த்ததும் வாகனத்தை குடியரசுத் தலைவர் நிறுத்தி வெளியே வந்தார். மக்களை பார்த்து கையசைத்தும், வணக்கம் தெரிவித்தார். அங்கு கூடியிருந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு, தான் கொண்டு வந்த சாக்லேட்களை வழங்கி மகிழ்ந்தார். பொதுமக்களும் குடியரசுத் தலைவரிடமிருந்து சாக்லேட்டுகளை வாங்கி மகிழ்ச்சியடைந்தனர். மசினகுடியை சேர்ந்த அனன்யா என்ற 11 வயது சிறுமி தான் எழுதிய 'தி பேர்ட்ஸ் ஆஃப் மசினகுடி' என்ற புத்தகத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் நன்றி தெரிவித்தார்.

பின், மாலை 5.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மசினகுடி சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூர் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை சென்றார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருவதை முன்னிட்டு, தெப்பக்காடு பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தெப்பக்காடு அடர்ந்த வனப்பகுதி என்பதால், 2 கி.மீ. சுற்றளவுக்கு அதிரடிப்படை போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இதுதவிர மசினகுடி, மாவனல்லா, பொக்காபுரம் ஆகிய இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE