தமிழகம்

தெற்காசிய உறைவாள் சண்டை போட்டியில் தங்கம் வென்ற தஞ்சை மாணவிக்கு சொந்த ஊரில் பாராட்டு

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தெற்காசிய அளவில் நடைபெற்ற 7-வது சாம்பியன்ஷிப் உறைவாள் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவிக்கு சொந்த ஊரில் இன்று கிராம மக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் எஸ்.தர்ஷினி (15). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் உறைவாள் சண்டை விளையாட்டு போட்டியில் கடந்த 8 ஆண்டுகளாக பயிற்சி பெற்று, மாவட்ட, மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் நேபாளம் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் தெற்கு ஆசிய அளவிலான உறைவாள் சண்டை போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, நேபாளம், கொரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் இந்தியா சார்பில் 18 வயதுக்குட்பட்டோர் பிரில் பங்கேற்ற தர்ஷினி முதலிடம் பெற்று தங்க பதக்கம் பெற்றார். இதையடுத்து தர்ஷினி மலேசிய நாட்டில் 2023-2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் முடிந்து கடந்த வாரம் அதற்கான முறைப்படியான சான்றிதழ்களும், பதக்கங்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து, தெற்கு ஆசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி தர்ஷினிக்கு சொந்த ஊரான சூரக்கோட்டையில் பாராட்டு விழா கிராம மக்கள் சார்பில் இன்று நடத்தப்பட்டது. விழாவுக்கு வந்தவர்களை தேசிய கபாடி பயிற்றுநரும், முன்னாள் தேசிய கபாடி வீரருமான ஜி.குலோத்துங்கன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி பழனிமேகம் தலைமை வகித்தார்.

விழாவில் கிராம மக்கள் பலரும் மாணவியை பாராட்டினர். இதைத் தொடர்ந்து மாணவி தர்ஷினி 108 தென்னங் கன்றுகளையும், 1,000 பனைவிதைகளையும் நட்டு கிராமத்தை பசுமை நிறைந்த கிராமமாக மாற்றும் முயற்சியை தொடங்கி வைத்தார். பின்னர் கிராம மக்கள் பொது இடங்களில் தென்னங்கன்றுகள், பனை விதைகளை நடவு செய்தனர்.

SCROLL FOR NEXT