அண்ணாமலை நடைபயணத்தில் காளை திமிறியதால் பரபரப்பு

By கி.மகாராஜன் 


மதுரை: மேலூரில் பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின்போது ஜல்லிக்கட்டுக் காளை திமிறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரை நடத்தி வருகிறார். மதுரை மாவட்டம் மேலூர் அரசு கலைக்கல்லூரி முன்பு அண்ணாமலை இன்று பாத யாத்திரையை தொடங்கினார். மேலூர் பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை பேசும்போது, ''விவசாயிகளுக்கு ரூ.2,700 மதிப்புள்ள உர மூடை ரூ.260-க்கு விற்கப்படுகிறது. பிரதமர் மோடி விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் உரம் வழங்கி வருகிறார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். அமைச்சர் உதயநிதியும், முதல்வரின் மருமகன் சபரீசனும் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இதனால் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு, டம்மி பதவி வழங்கியுள்ளனர்.

தமிழகம் அதிகளவு கடனில் உள்ளது. மதுபானம் ஏழை குடும்பங்களை பாதித்து வருகிறது. மதுபான கடைகளை திறப்பதால் குடிக்காதவர்கள் கூட குடிக்க நினைக்கின்றனர். தமிழகத்தில் கடையை திறந்து வைப்பதால் குடிக்காதவர்கள் கூட குடிக்க நினைக்கின்றனர். தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்க பாஜக நடவடிக்கை எடுக்கும். இதனால் பனைமரம் வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் ஆவார்கள்'' என்றார்.

முன்னதாக, மேலூர் அரசு கல்லூரி முன்பு அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்க ஜல்லிக்கட்டுக் காளை அழைத்து வரப்பட்டது. அப்போது திடீரென ஜல்லிக்கட்டு காளை திமிறியது. இதனால், அங்கு கூடி நின்றவர்கள் விலகி ஓடினர். பின்னர் காளை அமைதியான பிறகு காளையை வணங்கிவிட்டு அண்ணாமலை பாத யாத்திரையை தொடங்கினார். பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், மாநில துணைத் தலைவர் மகாலெட்சுமி, பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் மற்றும் நிர்வாகிகள் பாத யாத்திரையில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE