தமிழகத்துக்கு 30 டி.எம்.சி. தண்ணீர் உடனடியாக திறக்க வேண்டும்: காவிரி ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த தமிழக அரசு முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 30 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் இடையேயான காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான முடிவெடுக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த‌ நீர்வளத்துறை செயலர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஜூலை வரை பெய்த மழையின் அளவு, அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளியேற்றம் மற்றும் பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. கர்நாடக அரசின் தரப்பில் மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்த இருப்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 30 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE