ஆதி திராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் த.ஆனந்த், மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நடப்பு கல்வியாண்டில் (2023-24) ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதையடுத்து தலைமையாசிரியர், முதுநிலை ஆசிரியர், கணினிபயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர்,உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கு ஆக. 3-ம் தேதியும், பட்டதாரிஆசிரியர், இடைநிலை ஆசிரியர்,தமிழாசிரியர், காப்பாளர் ஆகியோருக்கு ஆக.4-ம் தேதியும், பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டமும் நடத்த முடிவானது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் காரணமாக இந்த பொது மாறுதல் கலந்தாய்வு தற்காலிமாக தள்ளிவைக்கப்படுகிறது. மாற்று தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். அந்த நாளில் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE