தமிழக கடலோரக் காவல் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட இந்து முன்னணி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘கேரளா மற்றும் தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஆயுத பயிற்சி செய்த இடத்தை என்ஐஏ அடையாளம் கண்டுள்ளது. எனவே, தமிழக கடலோரக் காவல் படை, தமிழக காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு மிக தீவிரமாக கண்காணிக்க வேண்டும்’ என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் 2019 ஏப்ரல் 21 அன்று. கிறிஸ்தவர்கள் ஈஸ்டரை செயின்ட் ஆன்டனி சர்ச்சில் கொண்டாடிய போது முதல் வெடிகுண்டு வெடித்தது. அதனை தொடர்ந்து 3 சர்ச்களில், 4 நட்சத்திர ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுகள் வெடித்து 400-க்கும் அதிகமானோர் உடல் சிதறி இறந்தனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் மிக மோசமாக படுகாயம் அடைந்தனர். இந்த ஜிகாதி தாக்குதல் கிறித்துவர்களை குறிவைத்து நடத்தப்பட்டது. அந்த வெடிகுண்டு சம்பவத்தின் சதிகாரர்கள் தமிழகத்திலும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 2020-ம் ஆண்டு கன்னியாகுமரி களியக்காவிளை செக்போஸ்ட்டில், உதவி காவல் ஆய்வாளர் வில்சன் எந்த காரணமும் இன்றி முஸ்லிம் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டு கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.இந்நிலையில் இந்த படுபயங்கரமான சதியில் ஈடுபட்டதாக தடை செய்யப்பட்ட 11 முஸ்லிம் அமைப்புகளில் 5 அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு விலக்கியுள்ளது.

கேரளாவில் ஜிகாதி பயங்கரவாதிகள் ஆயுத பயிற்சி செய்து வந்த 24 ஏக்கர் இடத்தை என்ஐஏ கையகப்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் முஸ்லிம் பயங்கரவாதிகளால் ஆயுத பயிற்சி செய்த இடத்தை என்ஐஏ அடையாளம் கண்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக கடலோரக் காவல் படை, தமிழக காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு மிக தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கடல் வழி போதை மருந்து கடத்தல், ஆயுத கடத்தல் நடக்கலாம். இதனால் வருங்காலத்தில் தமிழகத்தின் பாதுகாப்பு அபாயம் இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE