சாலைப் பணிகளில் சுணக்கம் இருந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் ஏ.வ.வேலு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: சாலைப் பணிகளில் சுணக்கம் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஏ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெடுஞ்சாலைத் துறையின் மாநில அளவில் அனைத்து அலகுகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இன்று (ஆக.3) மற்றும் நாளை (ஆகஸ்ட் 4) ஆய்வுக் கூட்டமும் நடைபெறுகிறது. இதன்படி இன்று (ஆகஸ்ட் 3 ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு மற்றும் நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தினை பொதுப் பணித் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், "நெடுஞ்சாலைத் துறையில் 10 அலகுகள் உள்ளன. இதில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு முக்கிய அலகு ஆகும். இந்த அலகில் பணியாற்றுவதே பெருமைக்குறியதாகும். சென்னை இராஜதானியில். (தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, ஒரிசாவின் இரு மாவட்டங்கள், கேரளாவின் ஒரு பகுதியில்,) 1941ம் ஆண்டு மோட்டார் வாகனங்கள் – 20,673, 1947ம் ஆண்டு மோட்டார் வாகனங்கள் – 21,560, 7 ஆண்டுகளில் (1941 முதல் 1947 வரை) வாகனங்களின் எண்ணிக்கை 887 மட்டுமே உயர்ந்தது.

ஆனால் இன்று தமிழகத்தில் மட்டுமே 31.03.2023ன்படி வாகனங்களின் எண்ணிக்கை 325 இலட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. கற்பனைக்கு எட்டாத அளவில் வாகன வளர்ச்சி உள்ளது. இதற்கு ஏற்றவாறு தமிழகத்தின் சாலைகளை பராமரிக்கும் மிகப் பெறும் பொறுப்பு உங்களைத் தான் சாரும். தமிழக அரசு மூலதன ஒதுக்கீட்டின் கீழ் 40 சதவீதம் அதாவது, ரூ.17,435 கோடி நிதியினை நெடுஞ்சாலைத் துறைக்கு வழங்கியுள்ளது. ,

நெடுஞ்சாலைத்துறை, விரைவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து அமைப்பினை உருவாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. நெடுஞ்சாலைத் துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஒரு முக்கிய அலகாகும். கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு 66,382 கி.மீ. நீள சாலைகளை பராமரிக்கிறது. இவ்வலகானது பல்வேறு சாலை அகலப்படுத்தும், பலப்படுத்தும், மேம்படுத்தும் பணிகள், பாலப்பணிகள் சாலைப் பாதுகாப்புப் பணிகள், மற்றும் அவசர வெள்ளச் சீரமைப்புப் பணிகள் போன்றவற்றை மேற்கொள்கிறது.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2021-22 மற்றும் 2022-23ல் எடுக்கப்பட்ட 64 நான்கு வழி சாலை பணிகளில், 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 55 பணிகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும். 6 முத்திரைப் பணிகள் விரிவாக ஆய்வு செய்து விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

சிப்காட், டாட்டா, ஓலா போன்ற பல்வேறு தொழில்துறை சம்பந்தமான 9 வைப்பு நிதி பணிகளை சிறப்பு கவனம் செலுத்தி, ஆய்வு செய்து விரைந்து முடித்திட வேண்டும். ஒரு ஆண்டுக்கு கீழ் உள்ள நிலுவைப் பணிகள் மற்றும் ஒரு ஆண்டுக்கு மேல் உள்ள பணிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு நீண்ட நாள் முடிக்கப்படாமல் உள்ள பணிகள் விரைந்து முடித்திட வேண்டும். வரவு செலவு திட்ட மதிப்பீடு கொண்டு தற்போது தற்போது வரை 34 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகளை தனி கவனம் செலுத்திசெயல்படுத்த வேண்டும். விரிவான திட்ட அறிக்கை நிலையில் உள்ள 12 பணிகள் மற்றும் மற்றும் நில எடுப்பு நிலையில் உள்ள 28 பணிகள், ஆக 40 பணிகளை தனி கவனம் செலுத்தி செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். சாலை பாதுகாப்பு பணிகளில் விபத்து கரும்புள்ளி பகுதி பணிகள், ஹாட்ஸ்பாட் பணிகள் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் தந்து தகுந்த பொறியியல் சீரமைப்பினை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து விபத்து கரும்புள்ளி பகுதி பணிகளிலும், மேலும் விபத்து நடைபெறாத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சாலைகளில் கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சுமை ஏற்றிச் செல்வதால், சாலைகளின் தாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது. சாலைகளில் போக்குவரத்து தரவுகளை கணக்கில் கொண்டு தான் சாலைகள் அமைக்கப்படுகின்றன. சாலைகள் பழுதாவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், 100 பாலங்கள் கட்டுதல், 100 பாலங்கள் புனரமைத்தல், 100 இடங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் போன்ற பணிகளுக்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைதள செய்திகளில் குறிப்பிட்ட சாலைகள் மற்றும் பாலங்கள் குறித்த செய்தி வெளியாகும் போது, அது குறித்து உடனடியாக சீர் செய்து, தலைமை பொறியாளர்களுக்கும், அரசு கூடுதல் தலைமை செயலாளருக்கும் விரிவான அறிக்கையை அனுப்ப வேண்டும். பத்திரிக்கைகளுக்கு செய்தியை உடனடியாக அனுப்ப வேண்டும்.

சாலை பராமரிப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மரங்களுக்கு வண்ணம் பூசுதல், பாலங்கள், சிறுப்பாலங்கள் சீரமைத்தல் புருவங்களை செம்மைப் படுத்துதல், சாலை பாதுகாப்பு போன்ற பணிகளை அவ்வப்போது செய்யப்பட வேண்டும்.

எனது கள ஆய்வின் போதும் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வின் போதும், இது குறித்த சுணக்கம் இருந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகஸ்ட் மாதம் பாலங்கள் பராமரிப்பு மாதமாக கடைபிடிக்கப்படுவதால், சிறு பாலங்கள், குழாய் பாலங்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி நீர் வழி பாதைகளில் உள்ள அடைப்புகளை அகற்றி பராமரிக்க வேண்டும். பாலங்களை வெள்ளை அடித்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் நான் கள ஆய்வு செய்ய உள்ளேன். ஆய்வின் போது பாலங்கள் பராமரிப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தி ஆய்வு செய்ய உள்ளேன். கண்காணிப்பு பொறியாளர்களும் கோட்ட பொறியாளர்களும் தனி கவனம் செலுத்தி பாலங்கள் பராமரிப்பை உரிய முறையில் செயல்படுத்திட வேண்டும்" என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE