அமைச்சர்கள் சிவ.மெய்யநாதனும், ரகுபதியும் தொகுதி மக்களுக்காக துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை: அண்ணாமலை

By செய்திப்பிரிவு

ஆலங்குடி: "தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற துறை அமைச்சர் சிவ.மெய்யநாதனும், சட்டத் துறை அமைச்சர் ரகுபதியும் தொகுதி மக்களுக்காக இதுவரை ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்றைய 'என் மண் என் மக்கள்' பயணம், மா, பலா, வாழை என முக்கனிகளும் விளையும் அரிய பூமியான ஆலங்குடியில் பெரும் மக்கள் திரள் நடுவே சிறப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி.ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம், கொத்தமங்கலம் பகுதிகளில் சாகுபடி ஆகும் மல்லி, ரோஜா, சம்பங்கி மலர்கள் தமிழகம் முழுவதும் மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. ஆசியாவிலேயே பெரிய குதிரை சிலை, ஆலங்குடி குலமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் சிலை என்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமை.

மோடியின் முகவரி: ஆலங்குடி தமிழகத்தில் E-shram தளத்தில் பதிவுசெய்துள்ள 84,72,150 பேரில், ஆலங்குடி பிரதமரின் காப்பீடு திட்டத்தின் பயனாளியாக உள்ள நடராஜன், தமிழகத்தில் 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் வரை கொடுக்கப்பட்ட மொத்த முத்ரா கடன் 2,02,603.94 கோடி ரூபாய். முத்ரா கடனுதவி மூலம் முன்னேற்றம் கண்ட ஆலங்குடி, கலைவேந்தன், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் தமிழகத்தில் பயன்பெற்ற 2,30,312 பேரில் ஆலங்குடி முருகேசன், தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது.

அவர்களில் ஒருவரான ஆலங்குடி பனங்குளம் வடக்கை சேர்ந்த அழகப்பன், தமிழகத்தில் 3.64 கோடி பேர் பிரதமரின் இலவச உணவு தானிய திட்டத்தின் பயனாளிகள். அவர்களில் ஒருவரான ஆலங்குடி மலவராயன் குடியிருப்பைச் சேர்ந்த புவனேஸ்வரி, தமிழகத்தில் செல்வமகள் திட்டத்தின் மூலம் பயனடைந்த 30 லட்சம் பேரில் ஒருவரான ஆலங்குடி பனங்குளம் மஹா ஸ்ரீ, இவர்கள்தான் பிரதமர் மோடியின் முகவரி.

இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான சிவ. மெய்யநாதன், கோபாலபுரம் விளையாட்டுப் பிள்ளைக்கு தனது விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியைத் தியாகம் செய்துவிட்டு, சுற்றுச் சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சரவையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

தமிழகம் சூழல் பாதுகாப்பில், 29 மாநிலங்களில் 21-வது இடம், சுத்தமான ஆற்று நீரில் கடைசி மூன்று இடங்களில் ஒன்று, மோசமான கடலரிப்பு நடக்கும் மாநிலம், காலநிலை மாற்றத்தினால் அதிக ஆபத்தைச் சந்திக்கும் உலக அளவில் 50 இடங்களில் ஒன்று என இவர் சுற்றுச் சூழல் துறை எதற்கு என்றே தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார். இவரும் மற்றொரு அமைச்சர் ரகுபதியும் தொகுதி மக்களுக்காக இதுவரை ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை.

நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், ஆலங்குடி கீரமங்கலம் அரசுப் பள்ளியிலிருந்து மருத்துவப் படிப்புக்குத் தேர்வான 12 மாணவர்களே இதற்கு சாட்சி. இந்த ஆண்டும் மூன்று மாணவிகள் மருத்துவக் கல்விக்குத் தேர்வாகியுள்ளனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில் மருத்துவக் கல்வி இடங்களை நன்கொடை வாங்கி விற்றுக் கொண்டிருந்தனர் என்பதை முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியே சொல்லியிருக்கிறார்.

மாணவர்களின் கல்விக் கனவுகள், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கள், மகளிர் மற்றும் தொழில் முனைவோர்களின் முன்னேற்றம் தொடர, ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு முழுவதுமாக முடிவு கட்ட, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடர, தமிழகமும் பெரும்பங்கு வகிக்கும். பெருந்திரளாகப் பேரன்பை வெளிப்படுத்தும் எம் மக்களே இதற்கு சாட்சி" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE