கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு விபத்து: சென்னை தடய அறிவியல் துறை குழுவினர் நேரில் ஆய்வு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கு வெடி விபத்து நடந்த இடத்தில் சென்னை தடய அறிவியல் துறை குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ம் தேதி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்ட படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், சென்னையில் இருந்து தடய அறிவியல் துறை துணை இயக்குனர்கள் விசாலாட்சி, விஜயலட்சுமி, சண்முகம் மற்றும் உதவி இயக்குனர் நளினி தலைமையிலான குழுவினர் இன்று கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி பழையபேட்டையில் வெடி விபத்து நடந்த பட்டாசு கிடங்கு இருந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

விபத்தில் தரைமட்டமான கட்டிடங்களை பார்வையிட்ட அவர்கள், உடல்கள் சிதறி கிடந்த இடங்கள், இடிந்து தரைமட்டமான சுவர்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் விபத்து நடந்த இடத்தை சுற்றிலும் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்தது உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். மெயின் ரோட்டில் இருந்து விபத்து நடந்த இடத்திற்கான தூரத்தை அளந்த அவர்கள், அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்தனர்.

மேலும், விபத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். காலை முதல் மாலை வரையில் அவர்களின் விசாரணை நடைபெற்றது. இது குறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, சம்பவ இடத்தில் முழுமையான விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE