சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் ஆக. 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்க வேண்டும். தமிழகத்துக்கு வரவேண்டிய காவிரி நிதி நீரை, கர்நாடக அரசுதிறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியும், விளை நிலங்களை அபகரித்து அழித்துவரும் என்எல்சி யைக் கண்டித்தும் தேமுதிக சார்பில் ஆக. 10-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட கழகநிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.