நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலருக்கு 2 வாரம் சிறை தண்டனை

By செய்திப்பிரிவு

மதுரை: சிவகங்கை அரசு உதவிபெறும் பள்ளி சார்பில், உயர் நீதிமன்றக் கிளையில் 2019-ல் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு:

எங்கள் பள்ளியில் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடத்தில் 2012-ல் ஆசிரியர் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்கு அங்கீகாரம் அளிக்கக் கோரி, மாவட்டக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்தோம். விண்ணப்பத்தை மாவட்ட கல்வி அலுவலர் நிராகரித்தார்.

இதனால், உயர் நீதிமன்றக் கிளையில் 2015-ல் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில், சம்பந்தப்பட்ட ஆசிரியையை பணி நிரந்தரம் செய்து, பணப்பலன்களை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, கல்வித் துறை சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடையாணை பிறப்பிக்கவில்லை. இதனால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்டக் கல்வி அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மாவட்டக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு நீதிபதி பட்டுதேவானந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்டக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நீதிமன்ற உத்தரவை மாவட்டக் கல்வி அலுவலர் வேண்டும் என்றே நிறைவேற்றாமல் இருந்தது உறுதியாகிறது. இதனால், அவர் நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளார். மாவட்டக் கல்வி அலுவலர் தற்போது நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். இந்த வழக்கின் உண்மைத் தன்மையை கருத்தில்கொள்ளும்போது, அவரது மன்னிப்பு ஏற்கும்படியாக இல்லை.

இதனால், மாவட்ட கல்வி அலுவலருக்கு 2 வாரம் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கல்வி அலுவலர் தரப்பில் கேட்கப்பட்டுள்ளதால், தண்டனை 2 வாரம் நிறுத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE