ரூ.5.37 கோடி மதிப்பிலான 9 கிலோ தங்கம் பறிமுதல்: தங்கச்சிமடத்தில் 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்துக்கு கடத்தி வரப்பட்ட 9.06 கிலோ எடையுள்ள ரூ.5.37 கோடி மதிப்பிலான தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்து 4 பேரை கைதுசெய்தனர்.

இலங்கையில் இருந்து தங்கச்சிமடம் கடலோரப் பகுதிக்கு படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தங்கச்சிமடம் கடற்பகுதியில் அவர்கள் நேற்று முன்தினம் தீவிர ரோந்து சென்றனர்.

அப்போது தங்கச்சிமடம் வடக்கு கடற்கரையில் கரை திரும்பிய 2 நாட்டு படகுகளை சோதனையிட்டதில் படகுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 5.37 கோடி மதிப்பிலான 9.063 கிலோ எடையுளள தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து, படகுகளில் இருந்த 4 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் தங்கச்சிமடம் மாந்தோப்பைச் சேர்ந்த தேச சகாயம், ஸ்ரீதர், தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த டேனியல், கெவின்ராஜ் என்பது தெரியவந்தது. இந்த தங்கக் கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களின் விவரம் குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE