என்எல்சி விவகாரம் | அவசர வழக்காக ஐகோர்ட்டில் இன்று மதியம் விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: என்எல்சி வழக்கை அவசர வழக்காக இன்று மதியம் விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக கத்தாழை, கரிவெட்டி மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களை என்எல்சி நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது.

இதில் இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை எனவும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், மாற்று குடியிருப்பு மற்றும் கடந்த காலங்களில் ரூ.6 லட்சம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையின் காரணமாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இதில், ஒரு சில பொதுமக்கள், விவசாயிகள் மறுத்து வந்தனர். இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இதனிடையே, பரவனாற்றுக்கு என்எல்சி சுரங்க நீரை எடுத்துச் செல்லும் வகையில், ஜூலை 26-ம் தேதி காலை வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கப்பட்டது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் அழிக்கப்பட்டு, அதில் வாய்க்கால் வெட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேத்தியாதோப்பு, விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் போராட்டம் நடத்திய பாமகவினர் கைது செய்யப்பட்டனர். என்எல்சிக்கு இடம் கையகப்படுத்துவதை எதிர்த்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் என்எல்சி விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.

இதனிடையே, என்எல்சி விரிவாக்க பணித் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று மதியம் விசாரிக்கிறது. என்எல்சியால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முருகன் என்பவர், "கையகப்படுத்திய நிலத்தை 5 ஆண்டுகளாக என்எல்சி பயன்படுத்தவில்லை என்பதால், நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும். மேலும் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு என்எல்சி தொல்லை தரக்கூடாது" என்று கூறி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். முருகன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி பாமக வழக்கறிஞர் பாலு நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் என்எல்சி வழக்கை அவசர வழக்காக இன்று மதியம் விசாரிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE