திருமயிலை மெட்ரோ ரயில் நிலைய பணி விரைவில் தொடங்க திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை திருமயிலை மெட்ரோரயில் நிலையப் பணி விரைவில்தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டம் 116.1 கி.மீ. தொலைவில்,3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம்-சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.

தற்போது 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இதுபோல, பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், திருமயிலை மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணி விரைவில் தொடங்க உள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

திருமயிலை நிலையம் (மயிலாப்பூர் நிலையம்) 3-வது மற்றும்4-வது வழித்தடத்துக்கான பரிமாற்ற நிலையமாக இருக்கும். இங்கு பொதுத்தளம், வணிக அலுவலகம், மேல் நடைமேடை, கீழ் நடைமேடை என 4 நிலைகளுடன் தரைக்கு கீழே 35 மீட்டர் (115 அடி) ஆழத்தில் இந்த நிலையம் அமைய உள்ளது. இதற்காக, 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுத்தப்பட உள்ளன.

ஓராண்டுக்கு முன்பே பணி தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. தற்போது, ஒப்பந்தம் வழங்கப்பட்டு விட்டது. விரைவில் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE