மேட்டூர்: மேட்டூர் காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் தனுஷ். தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், தனுஷ் தனது நண்பர்களான தீபக், ஸ்ரீநாத் மற்றும் தீபக் ஆகியோர், மேட்டூர் நால்ரோடு அருகே காவிரி ஆற்றில் ஆற்றங்கரைப் பகுதியில் நேற்று குளிக்க சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் நீரில் மூழ்கினார். அப்போது தனுஷ் உடன் சென்ற நண்பர்கள் கூச்சலிட்டு சத்தமிட்டனர். அப்பகுதியில் இருந்த மக்கள் ஓடி வந்து பார்க்கும் போது தனுஷ் நீரில் மூழ்கி விட்டார்.
இதையடுத்து, தகவல் அறிந்த மேட்டூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேட்டூர் தீயணைப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தனுஷ் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.