வருமான வரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கரூர் திமுகவினரின் ஜாமீன் ரத்து - நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கரூர் திமுகவினர் 15 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது வருமான வரி அதிகாரிகளை தாக்கி ஆவணங்களை பறித்து சென்றதாக திமுகவினர்மீது புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து திமுகவினர் பலரை கைது செய்தனர்.

இவர்களில் 15 திமுகவினர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். இதனை ரத்து செய்யக்கோரி வருமானத்துறை சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வருமான வரித் துறை தரப்பில் வாதிடும்போதும், "சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளிடமிருந்து 2 வாரண்ட் நகல், 2 அரசு முத்திரைகள், 3 வழக்கு தொடர்பான அரசு ஆவணங்கள், ஒரு பென் டிரைவ் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர். அந்த பென் டிரைவில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், சொத்துப் பத்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய குற்றமாகும். இதனால் அதிகாரிகளை தாக்கியவர்கள் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், "வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டோருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. ஜாமீன் ரத்து செய்யப்பட்ட அனைவரும் 3 நாளில் கரூர் தலைமை குற்றவியல் நடுவர் முன்பு சரணடைய வேண்டும். அங்கு அவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுக்களை கரூர் நீதிமன்றம் முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கலாம்" என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE