இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் 9 பேர் கைது

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து நேற்று முன்தினம் 400 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், வேல்முருகன், தட்ஷிணாமூர்த்தி ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை எல்லை தாண்டியதாகக் கூறி சிறைப்பிடித்தனர். மேலும், அப்படகுகளில் இருந்த சுரேஷ், ஆறுமுகம், முத்துக்குமார், மணிகண்டன், ஜெயசீலன், வேலு, முத்து இருளாண்டி, முகம்மது பக்ருதீன், ரங்கசாமி ஆகிய 9 மீனவர்களையும் கைது செய்தனர்.

பின்னர், இவர்களை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு சென்று, அந்நாட்டு மீன்வளத் துறையினரிடம் ஒப்படைத்தனர். அங்கு விசாரணைக்குப் பின்னர், மீனவர்கள் அனைவரும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.

8-ம் தேதி வரை சிறை: இவர்களை ஆக. 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து மீனவர்கள் 9 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின்14 விசைப்படகுகளுடன் 83 பேர் சிறை பிடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE