5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண் ணன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் வரும் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லாறில் தலா 11 செ.மீ., நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 10 செ.மீ., நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 9 செ.மீ., பந்தலூரில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள்,மத்திய மேற்கு வங்கக் கடல்பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், தென் மேற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான்,லட்சத்தீவு பகுதிகள், கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் வரும் 28-ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE