சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.
சிவகாசி வேலாயுதரஸ்தா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(47). இவர் சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் ஆர்.ஆர் மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வந்தார். இங்கு நேற்று 15 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். இங்கு நேற்று மதிய உணவு இடைவேளையின் போது வேதிப்பொருட்கள் கலவை செய்யும் இயந்திரத்தில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர். உணவு இடைவேளை நேரத்தில் பணியாளர்கள் இல்லாத போது தீ விபத்து ஏற்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமானது.