எஸ்.ஐ தேர்வில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இடஒதுக்கீடு கோரும் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மூன்றாம் பாலினத்தவர்களான கிரேஸ் பானு மற்றும் ரிஸ்வான் பாரதி ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள 615 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மே 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பெண்ணாக தேர்வு செய்தவர்களுக்கு மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. அதேபோல உடற்தகுதித் தேர்விலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை.

எனவே, தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சலுகைகளை வழங்கி திருத்திய அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையும், சிறப்பு இடஒதுக்கீடும் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த உத்தரவுகள் அனைத்தும் பரிந்துரைகள் போன்றவை எனக் கூறி, இந்த மனுவுக்கு, வரும் செப்டம்பர் 26-ம் தேதிக்குள் தமிழக அரசும், சீருடைப் பணியாளர் தேர்வாணையமும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE