மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்துவோர் பற்றி கவலை கொள்ள வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு 

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்துவோரைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாம் தொடக்க நிகழ்ச்சி தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இம்முகாமில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விண்ணப்பங்கள் பதிவேற்றும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர், பள்ளி வளாகத்திலேயே மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், விண்ணப்பங்கள் அளிக்க வரும் மகளிருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,"முதல்வராக பதவியேற்ற உடன், நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்துக்கான கோப்புகளில் தான் முதல் கையெழுத்து இட்டேன். இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 283 கோடி முறை பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டம் நிறைவேற்றும்போது தமிழக அரசுக்கு கடும் நிதி நெருக்கடி இருந்த போதிலும் மகளிர் பயன்பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு திட்டத்தை செயல்படுத்தினோம்.

மகளிர் உரிமை தொகை திட்டமும் அப்போதே செயல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். நிதிச் சூழல் காரணமாக தற்போது பயன்பாட்டுக்கு வருகிறது. மகளிர் சுயமரியாதையுடன் வாழவும், பொருளாதார மேம்பாடு அடையவும் உதவும். இந்தத் திட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். கொச்சைப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதுபற்றியெல்லாம் யாரும் கவலை கொள்ள வேண்டாம்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவியர்கள் தொடர்ந்து உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக ’புதுமைப் பெண்’ திட்டத்தை அறிமுகப்படுத்தி இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் மூலம் கல்லூரி மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதேபோல மகளிர் உரிமை தொகை திட்டமும் செப்டம்பர் 15 முதல் பயன்பாட்டுக்கு வரும். பெண்களுக்கு திராவிட இயக்கம் வழங்கியுள்ள மற்றுமொரு மாபெரும் கொடை தான் இந்த திட்டம்.

மகளிரின் சமூக பொருளாதார நிலையை உயரச் செய்யும் வகையிலான இந்தத் திட்டத்தால் பெண்கள் சுயமரியாதையும் பொருளாதார விடுதலையையும் பெறுவர். நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் தரப்பட இருப்பது உதவிப் பணம் அல்ல, இது மகளிருக்கான உரிமைப் பணம்.

ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி வரை இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாம்கள் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் செயல்படுத்தப்படும். இதுக்காக தமிழகம் முழுக்க 39 ஆயிரத்து 929 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் விண்ணப்பங்களை பதிவேற்றும் பணியில் 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்களும், மகளிருக்கு வழிகாட்டுதல் வழங்கிட 35 ஆயிரத்து 925 தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தகுதி வாய்ந்த பயனாளிகள் யாரும் விடுபடாத வகையில் இந்த முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு திட்டம் பயன்பாட்டுக்கு வரும். எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம் தொடரும்." இவ்வாறு முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE