விழுப்புரம்: திமுக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜகவின் தெற்கு மாவட்ட தலைவர் விஏடி கலிவரதனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், கனிம வளக் கொள்ளையினைத் தடுக்க வேண்டும், பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் தமிழகத்தின் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மக்களவை உறுப்பினர் கனிமொழி குறித்தும் பாஜகவின் தெற்கு மாவட்ட தலைவர் விஏடி கலிவரதன் அவதூறாக பேசியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.