21 சோதனை சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்: மணல் லாரி கூட்டமைப்பு கோரிக்கை

By செய்திப்பிரிவு

மத்திய அரசு உத்தரவிட்டபடி, மாநில எல்லைகளில் உள்ள 21 போக்குவரத்து சோதனைச் சாவடிகளையும் உடனே அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இக்கூட்டமைப்பின் தலைவர் எஸ்.யுவராஜ், போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும்போது செலுத்த வேண்டிய கட்டணம் உள்ளிட்ட அனைத்திலும் இணையவழி நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், மாநில எல்லைகளில் உள்ள 21 சோதனைச் சாவடிகள் அகற்றப்படவில்லை. இங்கு லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. எல்லை சோதனைச் சாவடிகளை அகற்ற வேண்டும் என மத்திய அரசும் உத்தரவிட்டுள்ளது. எனவே, இவற்றை உடனே அகற்ற வேண்டும்.

அதேபோல, உரிமத்தை சமர்ப்பித்த வாகனங்களுக்கு வரி விதிக்க கூடாது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவி மையம் அமைக்க வேண்டும். இடைத் தரகர்களை தடுக்கும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சிசிடிவி அமைத்து, ஆணையரகம் மூலம் கண்காணிக்க வேண்டும். ஒளிரும் பட்டை நல்ல நிலையில் இருந்தால் பயன்படுத்த அனுமதி தரவேண்டும். அதிக பாரம் ஏற்றிச் செல்வது குறித்து பொதுமக்களே புகார் அளிக்கும் வகையிலான செயலியை அறிமுகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE