மகளிர் உரிமைத் தொகை | கூட்டுறவு வங்கிகளில் ‘ஜீரோ பேலன்ஸ்’ சேமிப்பு கணக்கு: இணைப்பதிவாளர் தகவல்

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற கூட்டுறவு வங்கிகளில் ‘ஜீரோ பேலன்ஸ்’ சேமிப்பு கணக்கு தொடங்கப்படும் என மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இனணப்பதிவாளர் சி.குருமூர்த்தி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக வீடு தேடி கொடுக்கப்படும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து முகாம் நடக்கும் நாளில் சேர்க்க வேண்டும். இதனுடன், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், மின் கட்டண அட்டை அசல் வழங்க வேண்டும். அதன்படி, வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்காக சேமிப்பு கணக்கு தொடங்க, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ‘ஜீரோ பேலன்ஸ்’ சேமிப்பு கணக்குகள் தொடங்கப்படும்.

மதுரை மாவட்ட தலைமையகம், ஒத்தக்கடை, அலங்காநல்லூர், கே.கே.நகர், ஆவின், நாகமலை புதுக்கோட்டை, டி.கல்லுப்பட்டி, எழுமலை, கே.புதூர், மேலூர், கொட்டாம்பட்டி, கள்ளிக்குடி, ஐய்யர் பங்களா, கிருஷ்ணாபுரம் காலனி, ஆரப்பாளையம், சோழவந்தான், வாடிப்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, என்.சீ.எம் மில்ஸ் அலங்காநல்லூர், கீழையூர், அண்ணா நகர், விளாங்குடி, வில்லாபுரம், திருப்பரங்குன்றம், பேரையூர், அரசரடி, மதுரை கிழக்கு, பழங்காநத்தம், சாத்தமங்கலம், தல்லாகுளம், டி.டி.எஸ், பாண்டியராஜபுரம், செல்லூர், கூடல்நகர் ஆகிய 35 இடங்களிலுள்ள வங்கி கிளைகளில் ‘ஜீரோ பேலன்ஸ்’ சேமிப்பு கணக்குகள் தொடங்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE