சென்னை: ரேஷன் கடை, சத்துணவு திட்டம் வாயிலாக உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதை தடை விதிக்க கோரிய வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கனிமொழி மணிமாறன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது, "தமிழ் தேசிய பேரியக்கத்தின் உள்ள மகளிர் ஆயத்தின் செயலாளராக உள்ளேன். பொதுவாக பெரும்பாலான இந்திய பெண்களுக்கு ரத்த சோகை இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதற்கு ஏழ்மை, உணவு பழக்கம் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், மத்திய அரசு, இதுகுறித்து எந்த ஒரு முறையான ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல், செறிவூட்டப்பட்ட அரிசியை மக்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி: செறிவூட்டப்பட்ட உணவு ஒழுங்குமுறை சட்ட விதியின்படி, தலசீமியா, ரத்த சோகை உள்ளவர்கள் இரும்பு சத்து கொண்ட செறிவூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும், செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்கி சோதனை செய்யும் விரைவு திட்டத்துக்கு மத்திய அரசு 174.64 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் திருச்சி உள்பட நாடு முழுவதும் 13 மாவட்டங்களை மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்வு செய்தது. இந்த மாவட்ட மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கப்பட்டது. 2024-ம் ஆண்டுக்குள் இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை அனைத்து வீடுகளுக்கும் வழங்கும் விதமாக, ரேஷன் கடை (பொதுவிநியோக திட்டம்) வாயிலாகவும், பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் வாயிலாகவும் வழங்கப்படும் என்று பிரதமர் 2021-ம் ஆண்டு அறிவித்தார்.
» பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம் சிக்கலை ஏற்படுத்தும்: தமிழக பாஜக கண்டனம்
» தமிழ் முகமூடியை போட்டுக் கொண்டு ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின் சாடல்
மதிய உணவு திட்டம்: இதன்படி ரேஷன் கடைகள், மதிய உணவு திட்டம் உள்ளிட்டவைகள் மூலம் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி தற்போது வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 85.99 லட்ச குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடையில் இலவச அரிசியை நம்பியுள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், மதிய உணவு திட்டத்தை சாப்பிடுகின்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்புத் திட்டத்தில் பெரும்பாலான கிராம குழந்தைகள் சாப்பிடுகின்றனர்.
இவர்களது ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு இதுபோன்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த செறிவூட்டப்பட்ட அரிசி திட்ட அறிக்கையை உணவு செறிவூட்டல் வள மையம் (எப்.எப்.ஆர்.சி.) என்ற பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பு தாக்கல் செய்துள்ளது.
ஆய்வுகள் இல்லை: இந்த திட்டம் விதிகளை பின்பற்றாமல் அமல்படுத்தப்படுகிறது. இதனால், இந்தியாவில் மிகப்பெரிய உடல் நலபாதிப்பு ஏற்படுத்துவது கார்ப்பேரேட் நிறுவனங்களின் மறைமுகத் திட்டமாக உள்ளது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு முன்பு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், விரைவு திட்டம் அமல்படுத்தப்பட்ட திருச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில், ஆந்திரா மாநிலத்தில் நர்மதா மாவட்டத்தை தவிர, வேறு எந்த மாவட்டத்திலும் ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்று நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பொதுமக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதை மத்திய நிதி அமைச்சகம் கண்டித்துள்ளது. அதேநேரம், பொதுவிநியோகத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக ஒட்டுமொத்த மக்களுக்கும் உடல் நலத்தை பாதிப்பை ஏற்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை மத்திய அரசு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு பிறப்பித்து உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 8 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.