‘ஜீவன் பிரமான்’ திட்டம் மூலம் ஓய்வூதியர் உயிர்வாழ் சான்றிதழ்: வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்க ஏற்பாடு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘ஜீவன் பிரமான்’ திட்டத்தின் மூலம், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே மின்னணு உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க அஞ்சல் துறை ஏற்பாடு செய்து உள்ளது.

மாநில அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்’ வங்கி மூலமாக மின்னணு (டிஜிட்டல்) முறையில் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் சேவையை அஞ்சல் துறை வழங்கி வருகிறது.

இதற்காக, மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுடன், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கடந்த ஜூன் மாதத்தில் கையெழுத்திட்டது

இதற்கிடையே, மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை, ஜூலை 1-ம் தேதி முதல் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் உள்ள ஓய்வூதியதாரர்களின் சிரமங்களைத் தவிர்க்கும் விதமாக, ‘ஜீவன் பிரமான்’ திட்டத்தின் மூலம், ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, கைவிரல் ரேகையை பயன்படுத்தி, மின்னணு உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக தபால்காரரிடம் ரூ.70 செலுத்த வேண்டும்.

ஒரு சில நிமிடங்களில்...: ஓய்வூதியதாரர்கள், தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், செல்பேசி எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையைப் பதிவு செய்தால், ஒருசில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் சமர்ப்பிக்கலாம் என சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE