ஒடிசா அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஒடிசா மாநிலம் அருகே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னைவானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜூலை 20-ம் தேதி (நேற்று) காலை வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய ஒடிசா கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூலை 21) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல, வரும் 22, 23 மற்றும் 26-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24, 25-ம் தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இடி, மின்னலுடன்...: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

ஜூலை 20-ம் தேதி (நேற்று) காலை 8 மணியளவில் பதிவான மழை அளவுகளின்படி கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 7 செ.மீ., வால்பாறை, சின்கோனா, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, மேல்கூடலூர், சாம்ராஜ் எஸ்டேட், திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, ஊத்து ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்றுவீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE