இருக்கைகள் கூட ‘பேனா’ வடிவில்... - மதுரையில் வரவேற்பை பெறும் ‘கலைஞர் நூலகம்’

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தொன்மை, கலை, நாகரீகம், பண்பாடு, இலக்கியம், அரசியல், ஆன்மீகம் போன்ற பல்வேறு அடையாளங்களை தாங்கி நிற்கும் மதுரையின் மற்றொரு பெருமையாக கடந்த 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்ட ‘கலைஞர் நூலகம்’ திகழ்கிறது.

நவீன கட்டுமான தொழில்நுட்பத்தில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் தானியங்கி டிஜிட்டல் நூலகமாக இந்த நூலகம் செயல்பட தொடங்கியிருக்கிறது. இந்த நூலகம் மொத்தம் 6 தங்களுடன் 3 லட்சம் புத்தங்கங்களுடன் ஆசியாவிலே மிக பிரமாண்டமாகவும் கட்டப்பட்டுள்ளது. அரிய நூல்கள் முதல் அன்மை கால எழுத்தாளர்கள் வரை எழுதிய நூல்கள் வரை இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.

தற்போது இந்த நூலகத்தை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் ஆர்வமாக பார்வையிட்டு வருகிறார்கள். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் இந்த நூலகத்தை பார்வையிட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலாத்தலம் போல் திரள்கின்றனர். அதனால், மதுரையின் மீனாட்சியம்மன் கோயில், திருமலைநாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம் போன்ற சுற்றுலாத்தலங்கள் வரிசையில், தற்போது கலைஞர் நூலகமும் இணைந்து கொண்டது.

நூலகத்தை பார்வையிட வருகிற பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், நூலகத்தின் முகப்பு தோற்றம் முதல் நூலக அரங்கின் முன் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களை கவருவதற்கான நோக்கத்தில் இந்த நூலகத்தில் அவர்களுக்கான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் அறிவியல் ஆர்வத்தை தூண்டுகிற வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறார் அறிவியல் அரங்கம் குழந்தைகளை கவர்ந்துள்ளது. ஒரு அறிவியல் பூங்காவில் உள்ள அனைத்து விஷயங்களுடன் இந்த அறிவியல் அரங்கில் உள்ளது.

மனிதனின் உடல் எடை, கோளுக்கு கோள் மாறும். அந்த அடிப்படையில் குழந்தைகள், தங்கள் உடல் எடையை இந்த அறிவியல் அரங்கில் உள்ள ஹைடெக் எடை கருவில் நின்று, ஒவ்வொரு கோள்களிலும் தங்களது எடை எவ்வளவு என்பதை அறியலாம். குழந்தைகள் நூலகப்பிரிவு சுவரின் ஓவியங்கள், விசாலமான இருக்கைகள் போன்றவை குழந்தைகளை ஆசை ஆசையாக புத்தகங்களை எடுத்து படிக்க தூண்டுகிறது.

அதனால், தனியார், அரசு பள்ளி நிர்வாகங்கள், தற்போது அதிகளவு பள்ளிக் குழந்தைகளை இந்த நூலகத்திற்கு அழைத்து வர ஆரம்பித்துள்ளனர். நூலகத்தின் தரைதளத்தில் வரவேற்பு அறை அருகே பார்வையாளர்கள் அமரும் இருக்கைகளும் பேனா வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி நூலகத்தின் ஒவ்வொரு வடிவமைப்பும், சிறப்புகளும் வாசிப்பையும், எழுத்தார்வத்தையும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. சின்ன சிறு குழந்தைகளின் வியப்பு, பள்ளி மாணவர்களின் ஆர்வம், பெரிவயர்களின் பிரமிப்பு போன்றவற்றால் கலைஞர் நூலகம், தற்போது பார்வையாளர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE