தமிழகத்தின் உரிமையை மீட்க அதிமுக எப்போதும் போராடும் - கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி பேச்சு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: தமிழகத்தின் உரிமையை மீட்பதில் அதிமுக எப்போதும் போராடும் என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து, கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் கிழக்கு அசோக்குமார் எம்எல்ஏ., மேற்கு மாவட்ட செயலாளாரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் தலைமை வகித்தனர். அதிமுக துணை பொது செயலாளரும், வேப்பனப்பள்ளி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி கண்டனவுரையாற்றினார்.

தொடர்ந்து கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசியல் ரீதியாக தமிழகத்தின் உரிமையை மீட்பதில் அதிமுக எப்போதும் போராடும். கடந்த, 1998ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, காவிரி பிரச்சினை உட்பட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். அது நிறைவேறாததால் கூட்டணியை விட்டே விலகினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிர்வாகத்திறன் மிக்கவர். அவரது மறைவுக்குப் பின் பழனிசாமி முதல்வராகி, நான்கரை ஆண்டு காலம் அனைத்து திட்டங்களும் உருவாக்க நிதி ஆதாரத்தை திரட்டியவர்.

ஏழை மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசுடன் இணைந்து வழங்கியவர். மத்திய அரசுடன் எப்போது இணக்கமாக இருக்க வேண்டும்; எப்போது எதிர்க்க வேண்டும் என தெரிந்தவர். முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த திறமை இல்லை; தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறார் என்றே பொருள். இந்த தோல்விகளை மறைப்பதற்காக மத்திய அரசின் மீது பழி போடுகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு இருப்பதாக கூறுகிறார்.

ஆனால் திமுகவினர் மீது புதிய பல வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. பொன்முடி மீது செம்மண் ஊழலில் வந்த நிதி வெளிநாடுகளுக்கு முறைகேடான பணப் பரிவர்த்தனை செய்யப்பட்ட காரணங்களுக்காக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கிறது. செந்தில்பாலாஜி சிறையில் உள்ள நிலையில் அமைச்சரவையிலிருந்து அவரை நீக்காமல் இருப்பது யார். உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என ஸ்டாலின் கூறியதை தற்போது அவருக்கே திருப்பி கூறுகிறேன்.

எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கும் போது அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது என்பது தவறு. பீகார், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், ஜார்கண்ட், மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்ததா. தமிழகத்தில் மட்டும் கைது, சோதனை நடவடிக்கை நடக்கும்போது அதை, எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் ஸ்டாலின், தனக்கு கேடயமாக பயன்படுத்துகிறார். மோடியை எதிர்க்கும் சக்தி இந்தியாவில் யாருக்கும் இல்லை. அதனால் தான் இந்தியா என்ற புனித பெயரையே வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர்.

பிரதமர் மோடி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார் எவ்வளவு உச்சத்தில் உள்ளார் என்பது இதிலிருந்தே அனைவருக்கும் தெரியும். அவருக்கு அருகில் அமர வைத்ததால், பழனிசாமியும் எவ்வளவு செல்வாக்கு வாய்ந்தவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாட்னா கூட்டத்தில் டெல்லி அரசுக்கு, மத்திய அரசு நெருக்கடி கொடுப்பது குறித்து காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்குமாறு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அழுத்தம் கொடுத்தார். அதுபோல திமுக கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடகத்திற்கு மேகதாது அணை கட்டும் விவகாரத்தை நிறுத்த கோரி ஸ்டாலின் நிபந்தனை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம், முன்னாள் எம்எல்ஏ முனிவெங்கட்டப்பன், முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி தங்கமுத்து, நகர செயலாளர் கேசவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE