திமுக ஆட்சியில் அமளிப்பூங்காவாக இருக்கிறது தமிழகம்: ஜெயக்குமார் சாடல்

By செய்திப்பிரிவு

சென்னை: "சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டு தமிழகமே ஓர் அமளிப்பூங்காவாக, அமளிக்காடாக, அமளி மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது. மக்கள் பிரச்சினைகளில் இந்த திமுக அரசு கவனம் செலுத்துவதைவிட, ஊழல் செய்வது, எதிர்க்கட்சிகளை பழிவாங்குவது, ஊடகங்களை பழிவாங்குவது போன்ற ஜனநாயகத்தை பழிவாங்கும் செயலைத்தான் செய்து கொண்டுள்ளனர்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

விலைவாசி உயர்வைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அதிமுக சார்பில், தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வருவாய் மாவட்டங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் எழுச்சியான முறையில் நடைபெற்றது. திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டு காலத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கைப் பொறுத்தவரை, சென்னை மாநகரம் கொலைகளின் மாநகரமாகவும், தலைநகரமாகவும் உள்ளது.

சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டு தமிழகமே ஓர் அமளிப்பூங்காவாக, அமளிக்காடாக, அமளி மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது. மக்கள் பிரச்சினைகளில் இந்த திமுக அரசு கவனம் செலுத்துவதைவிட, ஊழல் செய்வது, எதிர்க்கட்சிகளை பழிவாங்குவது, ஊடகங்களை பழிவாங்குவது போன்ற ஜனநாயகத்தை பழிவாங்கும் செயலைத்தான் செய்து கொண்டுள்ளனர்.

தமிழகம் எந்தவொரு வளர்ச்சியும் இல்லாத நிலையில் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்பட அனைவருமே வீதிக்கு வந்து போராடுகிற ஒரு துர்பாக்கிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வராக இருந்துகொண்டு அவருக்கு நாட்டிலே என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. தங்களுடைய குடும்பம் வளம் பெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்திலும், ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பமாக வளர வேண்டும் என்பதற்காக கோடி கோடியாக கொள்ளையடித்து வருகின்றனர்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE