வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் `எலைட்' மதுவகைகள் விலை ரூ.320 வரை உயர்வு - உடனடியாக அமலுக்கு வருகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் `எலைட்' மது வகைகள் விலை ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 5,300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 500 கடைகள் மூடப்பட்டன.

அமைச்சர் ஆலோசனை: இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை தடுத்தல், கடை பணியாளர்கள் மீதான தாக்குதல், பணம் கொள்ளையைத் தடுத்தல் போன்றவை தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அவ்வப்போது இது தொடர்பாக அனைத்து மண்டல மேலாளர்களுடன் அமைச்சர் சு.முத்துசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலைட் மது வகைகளின் விலையை டாஸ்மாக் நிறுவனம் நேற்று உயர்த்தியுள்ளது. குறைந்தது ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.320 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, பீர் விலை 330 மி.லி.க்கு ரூ.10-ம், 500 மி.லி.க்குரூ.20-ம் ,750 மி.லி. அளவுகொண்ட விஸ்கி, ஓட்கா, பிராந்தி வகைகளுக்கு ரூ.240-ம், 700 மி.லி.அளவு கொண்ட ரம் வகைகளுக்கு ரூ.240-ம், ஒரு லிட்டர் அளவு கொண்ட விஸ்கி, ஓட்கா, ரம்ரகங்களுக்கு ரூ.320-ம் விலைஉயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, வேறு சில ரக மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச்-க்கு பிறகு: 2021 ஆகஸ்ட் மாதம் இதேபோல வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.500 வரை உயர்த்தப்பட்டது. கடந்தஆண்டு மார்ச் மாதம் இதர மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் வெளிநாட்டு இறக்குமதி மதுபானங்களின் விலைஉயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE