அமைச்சர் பொன்முடி, மகன் கவுதம சிகாமணியிடம் அமலாக்கத் துறை விசாரணை - ரூ.41.90 கோடி நிரந்தர வைப்பு தொகை முடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறைஅதிகாரிகள் 2-வது நாளாக நேற்று விசாரணை நடத்தினர். அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி.யிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ், குற்றச்செயலில் நேரடியாக தொடர்புடையரூ.41.90 கோடி நிரந்தர வைப்புத்தொகை முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத் துறைஅமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர்மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்க துறைக்கு தகவல் கிடைத்ததன்பேரில், சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். 13 மணி நேர சோதனைக்கு பிறகு,சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு பொன்முடியை அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரித்தனர். விதிமுறைகளை மீறிசெம்மண் குவாரி உரிமம் வழங்கியது, பணப் பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. இரவு 8 மணிக்கு தொடங்கிய விசாரணை, நேற்று அதிகாலை 3.30 மணி வரை நீடித்தது.

18-ம் தேதி (நேற்று) மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு மற்றும் அந்நியச் செலாவணி முறைகேடு விவகாரத்தில் ஆஜராகுமாறு பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கும் சம்மன் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் இருவரும் நேற்று மதியம் 3.50 மணிஅளவில் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்துக்கு வந்தனர். பிரதான நுழைவுவாயில் முன்பு செய்தியாளர்கள் கூட்டம் அதிகம்இருந்ததால், பின்பக்க நுழைவுவாயில் வழியாக அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு சென்றனர். குடும்ப வழக்கறிஞரான விழுப்புரத்தை சேர்ந்த எட்வர்ட் ராஜாவும் சென்றார். ஆனால், விசாரணையின்போது உடன் இருக்கஅவரை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மாலை 4 மணிக்குதொடங்கிய விசாரணை இரவு 10 மணி வரை நடந்தது.

இந்நிலையில், அமலாக்கத் துறை நேற்று இரவு வெளியிட்டசெய்திக்குறிப்பு: கனிமவளத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, அவரது மகன், உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் செம்மண் குவாரி உரிமம் வழங்கியது தெரியவருகிறது. சட்ட விரோத செம்மண் குவாரி மூலம் கிடைக்கப்பெற்ற பல லட்ச ரூபாய் பணம் பல்வேறுபரிவர்த்தனைகள் மூலம் பினாமிகள் பெயரிலான வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபுஅமீரகத்தில் உள்ள 2 நிறுவனங்களின் வங்கி கணக்குகளுக்கு முறைகேடாக பணம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தோனேசிய நிறுவனம் ரூ.41.57 லட்சத்துக்கு வாங்கப்பட்டு, பின்னர் 2022-ல் ரூ.100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த வெளிநாட்டு முதலீடுகள் நடந்தபோது, அதிகமதிப்பில் ஹவாலா பணமாக மாற்றப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி. ஆகியோர் தொடர்புடைய 7 இடங்களில் கடந்த17-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. பொன்முடி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.81.70 லட்சம்கணக்கில் வராத ரொக்கப் பணம்பறிமுதல் செய்யப்பட்டது.

முறையாக விளக்கம் அளிக்கப்படாத ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் (பிரிட்டிஷ் பவுண்டு) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை திசைதிருப்பும் விதமாக, பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும்,அவர்களுக்கு சொந்தமான மருத்துவமனை மூலம் கிடைக்கப்பெற்றது போன்று போலியான கணக்கு மற்றும் ஆவணங்களை தயாரித்ததும், அமலாக்கத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, தடுக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடான கணக்கு விவரங்கள் அனைத்தும் வழக்கில் தொடர்புடைய ஒருவர் மூலம் பெறப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் கணக்கு விவரங்களுக்கு அவர்கள் சொல்லும் காரணம் நம்பத்தகுந்ததாக இல்லை.

சொத்துகள், நிறுவனங்கள் வாங்கியது, பிற நிறுவனங்களில் முதலீடு செய்தது சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் நடந்திருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இந்த குற்றச்செயலில் நேரடியாக தொடர்புடைய ரூ.41.90 கோடிமதிப்பிலான நிரந்தர வைப்புத் தொகை, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE