பெண்ணின் இதயத்தில் அடுத்தடுத்து இரு முக்கிய அறுவை சிகிச்சைகள்: வெற்றிகரமாக செய்துமுடித்த கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

By செய்திப்பிரிவு

கோவை: பெண்ணின் இதயத்தில் அடுத்தடுத்து இரு முக்கிய அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு டீன் பாராட்டு தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் லட்சுமி (43). ருமேட்டிக் வகை இதய நோயினால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இதய துடிப்பு பாதிக்கப்பட்டிருந்தது. ருமேட்டிக் மைட்ரல் வால்வு அடைப்பும் ஏற்பட்டிருந்தது. இவ்வாறு இரு வேறு இதய சிக்கல்கள் இருந்ததால் சிகிச்சை அளிப்பது மருத்துவர்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது.

சாதாரணமாக ஒருவருடைய இதயம் ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 முறை துடிக்கும். ஆனால் இவருடைய இதய துடிப்பு சராசரியாக 30 முதல் 35 ஆக இருந்தது. இவ்வாறு இதய துடிப்பு மிகவும் குறைவாக இருப்பது, இதயத்தை நாளடைவில் செயலிழக்க செய்துவிடும் என்பதால், உடனடியாக தற்காலிக ‘பேஸ்மேக்கர்’ பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதன்படி இவருக்கு கடந்த ஜூன் 25-ம் தேதி தற்காலிக பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டது. இதையடுத்து, இதய துடிப்பு தற்காலிகமாக சீரான நிலையை அடைந்தது. அதைத்தொடர்ந்து, இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் சீனிவாசன், உதவி பேராசிரியர்கள் அரவிந்த் குமார், இளவரசன், மயக்க வியல் துறை தலைவர் கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்கிய குழுவினர் மைட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை அளித்தனர்.

பின்னர், கடந்த 8-ம் தேதி இதயவியல் துறை தலைவர் ஜெ.நம்பிராஜன், உதவி பேராசிரியர்கள் ஏ.என்.செந்தில், சக்கரவர்த்தி, ஜெகதீஷ், மணிகண்டன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் நிரந்தர பேஸ்மேக்கர் கருவியை பொருத்தினர்.

இது தொடர்பாக, மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: இவ்வாறு இரு இதய கோளாறுகளும் ஒருசேர ஏற்படுவது மிகவும் அரிதான ஒன்றாகும். இதனை கோவை அரசு மருத்துவமனை இதயவியல் துறை மருத்துவர்கள் உரிய முறையில் கையாண்டு சிறப்பான சிகிச்சை அளித்தனர்.

தனியார் மருத்துவமனைகளில் மைட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம், நிரந்தர பேஸ் மேக்கர் பொருத்துவதற்கு ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை செலவாகும். ஆனால், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE