மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை வீதிகளில் வாகனங்களை அனுமதிக்கக் கோரிய மனு தள்ளுபடி

By கி.மகாராஜன் 


மதுரை: மீனாட்சியம்மன் கோயில் 4 சித்திரை வீதிகளிலும் வாகனங்களை அனுமதிக்கக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை சித்திரை வீதி மற்றும் சுற்று வீதிகளில் குடியிருப்போர் மற்றும் வியாபாரிகள் சங்க செயலாளர் மகேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள 4 சித்திரை வீதிகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் கோயில் வாகனங்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் வாகனங்கள் மட்டும் தடையின்றி சென்று வருகின்றன.

அதே நேரத்தில் குடியிருப்போர் மற்றும் பக்தர்களின் வாகனங்களை அனுமதிப்பதில்லை. எனவே, கோயிலைச் சுற்றி 4 சித்திரை வீதிகளிலும் டூவீலர்கள், கார் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில், பொதுமக்கள், கோயிலின் பாதுகாப்பு மற்றும் பொது நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பொது நலன் கருதி எடுக்கப்பட்ட கொள்கை ரீதியான முடிவில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE