உம்மன் சாண்டி உடலுக்கு மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: பெங்களூரில் உடல்நலக்குறைவால் காலமான கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார். அவருக்கு வயது 79. இந்நிலையில், பெங்களூரில் உம்மன் சாண்டி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட உம்மன் சாண்டி, அதற்காக ஜெர்மனியில் சிகிச்சை பெற்றார். இந்த வருட தொடக்கத்தில் ஜெர்மனியில் இருந்து கேரளம் திரும்பிய அவர், பேசும் திறனையும் 90 சதவீதத்துக்கு மேல் இழந்திருந்தார். இதனால், உம்மன் சாண்டி அண்மைக் காலமாக அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் அதிகம் பங்கேற்கவில்லை.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை மேலும் மோசமடைய சிறப்பு சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.

கேரள சட்டசபையில் அதிக காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர் உம்மன் சாண்டி. தனது ஆஸ்தான தொகுதியான புதுப்பள்ளியை 18,728 நாட்கள் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி வரலாறு படைத்தவர். 51 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்களுக்கும் மேலாக எம்எல்ஏவாக காங்கிரஸ் சார்பில் இரண்டு முறை கேரளத்தின் முதல்வராக பதவி வகித்தவர் உம்மன் சாண்டி. 27 வயதில் 1970 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தொடங்கிய அவர், அதன்பிறகு 11 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.

2004 முதல் 2006 வரை மற்றும் 2011 முதல் 2016 வரை இரண்டு முறை மாநில முதலமைச்சராக இருந்தார். கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு அமைச்சரவைகளில் நான்கு முறை அமைச்சராக இருந்ததைத் தவிர, நான்கு முறை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார். தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுடனும், தமிழகத்துடனும் அதிக நெருக்கம் காண்பித்தவர் அவர். அவரின் மறைவு, கேரள மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE