“அமலாக்கத் துறை சோதனையை துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள்” - பொன்முடியிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் பொன்முடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, அமலாக்கத் துறை சோதனையை துணிச்சலுடனும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

பெங்களூரு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர் பொன்முடியிடம் பேசும்போது, அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அவரிடம் அறிவுரை கூறினார். மேலும், மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மிக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும் என்று பொன்முடியிடம் முதல்வர் தெரிவித்தார் .

விடிய விடிய விசாரணை: தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்க துறைக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன்படி, சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், அமைச்சரின் சென்னை வீட்டில், கணக்கில் வராத வெளிநாட்டு கரன்சி உட்பட ரூ.70 லட்சம் ரொக்கம், டைரி உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக பொன்முடியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

13 மணி நேரத்துக்கு மேலாக நடந்த சோதனைக்கு பிறகு, இரவு 8 மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரது காரில் அழைத்து சென்றனர். அங்கு நள்ளிரவை தாண்டி விசாரணை நீடித்தது. அப்போது, மகன் அசோக் உடன் இருந்தார். இந்த விசாரணை இன்று அதிகாலை 3 மணியளவில் நிறைவு பெற்றது. இதன்பின் அவர் வீடு திரும்பினார். இதனிடையே, இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத் துறை சம்மன் அளித்துள்ளது என்று அவரின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE