பைபிளில் கூறப்பட்டுள்ள நிரந்தர நரகம் நவீன சட்ட முறையில் சாத்தியமல்ல - உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

By கி.மகாராஜன் 


மதுரை: பைபிளில் கூறப்பட்டுள்ள நிரந்தர நரகம் என்ற தண்டனை நவீன சட்டமுறையில் சாத்தியமல்ல என உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த எஸ்.சந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சிங்கப்பூரில் கொத்தனராக பணிபுரிகிறேன். திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1994-ல் பாஸ்போர்ட் பெற்றேன். என் பாஸ்போர்ட் 2014-ல் காலாவதியானது. பாஸ்போர்ட் புதுப்பிக்க முகவர் வழியாக விண்ணப்பித்தேன். அந்த முகவர் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்துள்ளார்.

இதனால் போலீஸார் என்னை விசாரணைக்கு அழைத்தனர். விசாரணையின் போது எனது பாஸ்போர்ட்டை வழங்கினேன். பின்னர் என் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. எனவே என் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவித்து பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், "மனுதாரரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்த பாஸ்போர்ட் அலுவலரின் நடவடிக்கையை தவறு சொல்ல முடியாது. தவறான தகவல் அளிக்கப்பட்டதால் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. குடிமக்கள் சில பணிகளுக்காக அதிகாரிகளை அணுக முகவர்களின் உதவியை நாடுகின்றனர். இந்த வழக்கில் மனுதாரர் அணுகிய முகவர் தவறு இழைத்துள்ளார். விரைவாக பாஸ்போர்ட் பெற தவறான தகவல் அளித்துள்ளனர். பரிசீலனையின் போது தவறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மனுதாரர் 9 ஆண்டுகளாக பாஸ்போர்ட் இல்லாமல் இருக்கிறார். இதனால் அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தவறு செய்திருந்தாலும் அவரை எப்போதும் கண்டிக்க முடியாது. பைபிளில் கூறப்பட்டுள்ள நிரந்தர நரகம் என்பது நவீன சட்டவியல் சீர்த்திருத்த நடைமுறையில் சாத்தியமல்ல.

மனுதாரர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மனுதாரர் புதிதாக மனு அளிக்க வேண்டும். ஏற்கெனவே தவறான தகவல் அளிக்கப்பட்டதால் பாடம் கற்றுக்கொண்டதால் இந்த முறை சரியான தகவல்களை அளிப்பார் என நீதிமன்றம் நம்புகிறது. மனுதாரர் புதிதாக மனு அளிக்கும்பட்சத்தில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE