ஜூலை 25-க்குள் பதிவுத் துறை அலுவலர்கள் சொத்து அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சார்பதிவாளர், அதற்கு மேல் உள்ள அலுவலர்கள், மற்ற பணியாளர்கள் அனைவரும் வரும் ஜூலை 25-ம் தேதிக்குள் சொத்து அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் சுற்றறிக்கை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில், W.P Nos.2711, 2719 of 2019 மற்றும் 3177 of 2020 and W.M.P.No.3683 0f 2020 Dated 17.07.2023 என்ற வழக்கில் பதிவுத்துறை தலைவர் ஆஜரான போது சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களின் சொத்து அறிக்கையைப் பெற்று சரிபார்க்க உத்தரவிட்டதற்கு இணங்க உரிய சுற்றறிக்கை 17.07.2023 அன்று பிறப்பிக்கப்பட்டது.

அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 விதி 7(3)ல் அரசு பணியாளர் ஒவ்வொருவரும் அவர்களுடைய சொத்து அறிக்கையினை ஒவ்வொரு 5 ஆண்டு கால இடைவெளியில் உரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் உட்பிரிவு 7(3)(a)ல் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமக்கு முன்னோர் வழியாக கிடைத்த அல்லது தமக்கு சொந்தமான அல்லது குத்தகை அல்லது அடமானம் மூலம் தன்னுடைய குடும்ப உறுப்பினரின் அல்லது மற்றொருவரின் பெயரில் உள்ள அசையாச் சொத்து"

சார்பதிவாளர், அதற்கு மேல் உள்ள அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் அனைவரும் தங்கள், குடும்ப உறுப்பினர்கள் (தாய், தந்தை, சகோதரர், சகோதரி, கணவர்\ மனைவி, மகன்,மகள் மற்றும் கணவர்\மனைவியின் தாய் தந்தை மற்றும் சகோதரர் சகோதரி) மற்றும் தொடர்புடைய நபர்கள் ஆகியோரது சொத்து அறிக்கையை ஆதார் எண் மற்றும் நிரந்தர கணக்கு எண் (PAN) இணைத்து ஒரு வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர்கள், துணைப் பதிவுத் துறை தலைவர்கள், பதிவுத்துறை தலைவரிடம் 25.07.203க்குள் சமர்ப்பிக்க சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE