‘தமிழ்நாடு நாள்’ விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் புகைப்படக் கண்காட்சி: அரசு  

By செய்திப்பிரிவு

சென்னை: ”தமிழ்நாடு நாள்” விழாவை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் பேரணி மற்றும் புகைப்படக் கண்காட்சி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "தமிழ்நாடு நாள் ஜூலை 18-ம் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு (2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக முதல்வர் கலந்துகொண்டார். விழாவில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.

நடப்பு ஆண்டில் வரும் ஜூலை 18-ம் தேதி அனைத்து மாவட்டங்களில் “தமிழ்நாடு நாள்” குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை ஏந்திச் செல்வார்கள்.

அதேபோன்று “தமிழ்நாடு நாள்” முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறியும் வகையில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களில், இச்சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறும். அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE