விழுப்புரம் சாலை விபத்தில் பலியான மூவரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: விழுப்புரம் கீழ்புத்துப்பட்டியில் உள்ள சந்திப்பு சாலையில் நிகழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், விபத்தில் பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், கீழ்புத்துப்பட்டியில் உள்ள சந்திப்பு சாலையில் ஞாயிறு (ஜூலை 16) அதிகாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று மீன் வாங்க காத்துக் கொண்டிருந்த புதுக்குப்பம் மீனவ பெண்கள் மீது மோதியதில் லட்சுமி (45) க/பெ. வல்லத்தான் மற்றும் கோவிந்தம்மாள் (50) க/பெ. கிருஷ்ணன் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர் என்றும், திருமதி. கெங்கையம்மாள் (45) க/பெ. அஞ்சாபுலி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நாயகம் (45) க/பெ. ராமலிங்கம், கேமலம் (46) க/பெ. மூர்த்தி, பிரேமா (45) க/பெ. நாகராஜ் ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தி உள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமுற்ற நாயகத்துக்கு 1 லட்சம் ரூபாயும், லேசான காயத்துடன் சிகிச்சையில் உள்ள மற்ற இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE