தஞ்சாவூர்: சாலை அகலப்படுத்தும் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்து யானை கற்சிலை

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: திருவிடைமருதூர் வட்டம், திருபுவனத்தில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணியின்போது மண்ணில் புதைந்திருந்த பழங்காலத்து யானை கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

கும்பகோணம்-மயிலாடுதுறை சாலை அகலப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் பணி திருபுவனத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் சாலையின் இடது புறத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மழை நீர் வடிகாலுக்காக பள்ளம் தோண்டியபோது, பாதி உடைந்த நிலையில் கலைநயத்துடன் அழகிய வேலைப்பாடுகளுடன் 2 அடி உயரத்தில், மூன்றரை அடி நீளமும், ஒன்றரை அடி அகலமும், சுமார் 50 கிலோ எடையும் கொண்ட யானை கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பாகத் தகவலறிந்த திருவிடைமருதூர் வட்டாட்சியர் டி.சுசீலா மற்றும் திருவிடைமருதூர் போலீஸார், அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். பின்னர், அந்தச் சிலையை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்தச் சிலை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டாட்சியர் டி.சுசீலா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE