சென்னை: சென்னையில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனால், அங்கிருந்து ஏவப்படும் ராக்கெட்களை சென்னையில் இருந்து தெளிவாக காண முடியும்.
சந்திரயான்-3 ஏவப்படுவதை பார்க்க, நேற்று பிற்பகல் 2 மணியில் இருந்தே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களின் மாடிகளில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட அடுத்த சில விநாடிகளில், ராக்கெட் உயரே பறந்து செல்வது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தெளிவாக தெரிந்தது. தீப்பிழம்பை கக்கியபடி ராக்கெட் பறந்து செல்வதை பார்த்ததும், பொதுமக்கள் கைதட்டியும், விசில் அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.